பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரத் தமிழக அரசு மறுப்பதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவையின் இன்றைய நிகழ்வில், தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் எண்ணிக்கை என்ன? இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், புதிய வீடுகள் கட்டுவதற்குத் தேவையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் வினா எழுப்பப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிரதமர் மோடியைத் தமிழக மக்கள் பாராட்டி விடுவார்கள் என்பதற்காகவே ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதைத் தமிழக அரசு மறுப்பதாகக் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் உள்ள ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பது பிரதமர் மோடியின் குறிக்கோள் எனக்கூறிய அவர், தமிழக மக்களுக்கு மாநில அரசு அநீதி இழைப்பதாகத் தெரிவித்தார்.
வீடுகளைக் கட்டித் தரவும், அதற்குத் தேவையான நிதியை வழங்கவும் மத்திய அரசு தயாராக இருந்தும் அதனைத் தமிழக அரசு ஏற்கவில்லை எனவும் கூறினார்.
எனவே, தமிழக அரசைக் கைகூப்பிக் கேட்பதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்,
தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டி தருவதற்கான அனுமதியை அரசு வழங்குவதோடு அதற்கான ஆய்வை நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.