விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையதள இணைப்புடன் இலவச கைக்கணினி வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் நேரங்களில் உண்மை விளம்பிகள் போலவும், ஆட்சி அமைத்தவுடன் பொய்களின் கூடாரமாகவும் மாறி மாறி இரட்டை வேடம் போடும் திமுக அரசின் போலி முகத்திரையைக் கிழித்தெறியும் நமது “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” என்ற கேள்வித் தொடரின் அடுத்த அத்தியாயத்தில், திமுகவின் வாக்குறுதி எண் 163 என்னவாயிற்று என்பதைப் பற்றி பார்ப்போம்!
தமிழகத்தின் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 4G/5G உள்ளிட்ட 10 GB இணையதள இணைப்புடன் கைக்கணினி வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்க, சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு மட்டும் கைக்கணினிகளை வாரி வழங்கி மகிழ்ந்தது திமுக அரசு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுப்புது திட்டங்களுக்கு விதவிதமாக பெயர் வைக்கத் தெரிந்த திமுக அரசுக்கு, அத்திட்டங்களை முறையாக நிறைவேற்றும் நிர்வாகத்திறன் சற்றும் இல்லை என்பதற்கான மற்றுமொரு சான்று இது.
படிக்கும் பிள்ளைகளின் அத்தியாவசியத் தேவையை விட, மாநகராட்சி ஊழியர்களின் அநாவசியத் தேவையை அத்தனை அவசரமாக எதற்கு நிறைவேற்ற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் பெருங்கோபமாக இருக்கிறது.
இருப்பதையும் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்தியதைப் போல, அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மடிக்கணினிகள் திட்டத்தை நிறுத்தியதோடு மட்டுமன்றி, தங்களின் தேர்தல் வாக்குறுதியான கைக்கணினிகள் வழங்கும் திட்டத்தையும் காற்றில் பறக்கவிட்டு, நமது பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்கு வலுவான தடைக்கல்லாக நிற்கும் இந்த விடியா அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.