கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பணிகள் எப்படி நடத்தப்படும் என்பது குறித்து, தேர்தல் ஆணையம் விரிவான தகவல்களையும் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை வந்து சோதனை செய்வார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்துத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க இருப்பதையும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உண்மையான வாக்காளரின் வாக்குகள் விடுபட்டால் மேல் முறையீடு செய்து வாக்கு பெறுவதை உறுதிப்படுத்த முடியும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல, அறிவிப்பு வரும் முன்பே எதிர்ப்பைத் தொடங்கி விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் மூலம், குறிப்பிட்டவர்களின் பெயர்களை நீக்க பாஜக முயற்சி செய்வதாக கூறி இருக்கிறார். இதன் மூலம், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்று பெற்று விடும் என்று தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக தேர்தல் ஆணையம் பயன்படுத்தப்போவது தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைத் தான். அவர்கள் கட்சி பாகுபாடின்றி தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி பணியாற்றி, போலி வாக்காளர்கள் இருந்தால் நீக்கப் போகிறார்கள். இரட்டை வாக்குகள் இருந்தால் நீக்கப்போகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பு வரும் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? தமிழக அரசு ஊழியர்கள் மீதே அவருக்கு நம்பிக்கையில்லையா? இதிலிருந்தே, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கான வாக்காளர் தரவு பகுப்பாய்வில் மொத்தம் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. 4,370 இரட்டை வாக்காளர் பதிவுகளும், போலி முகவரியுடன் 9,133 வாக் காளர்களும் உள்ளதாக தெரிகிறது.
கொளத்தூர் தொகுதியில் உடனடியாக தணிக்கை மேற்கொண்டு, போலி வாக்காளர் களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தொகுதியிலேயே இப்படி நிலைமை என்றால் மற்ற தொகுதிகளிலும் எவ்வளவு போலி வாக்காளர்கள் இருக்கக்கூடும்? என்றும் எல்.முருகன் தெரிவித்துளளார்.
















