ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சரணடைந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் அடாவடியான கருத்துக்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் முழு அளவிலான போருக்குத் தயார் என்று கூறியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் மீண்டும் இந்தியாவை வம்புக்கு இழுத்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற நாளில் இருந்தே இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றனர். இதற்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. பதிலுக்கு இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி ஏவிய அனைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானிலேயே இடைமறித்து இந்தியா தாக்கி அழித்தது. மேலும் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிலைகளையும் இந்தியா தாக்கி அழித்தது.
இந்தியாவின் அதிரடி தாக்குதலை தாங்க முடியாமல் போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் இந்தியாவுடன் கெஞ்சியது. இந்தியாவும் தற்காலிகமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தியது. எனினும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் உட்பட அந்நாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு பின்னணியில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பலுசிஸ்தானில் அமைதியின்மையைத் தூண்டுவதாகப் பாகிஸ்தான் வைக்கும் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துவருகிறது. இந்நிலையில், அதற்காகவே டெல்லி கார் குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக ஈடுபட்டதாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னாள் “பிரதமர்” அன்வாருல் ஹக், பகிரங்கமாகக் கூறியுள்ளார். பலுசிஸ்தானில் இந்தியா வன்முறையைத் தூண்டினால், செங்கோட்டை முதல் காஷ்மீர் காடுகள் வரை இந்தியாவைத் தாக்குவோம் என்று தான் முன்பே சொன்னதாகவும், அல்லாவின் அருளால், அதைச் செய்துவிட்டதாகவும், இந்தியாவில் கொல்லப்பட்டவர்களின் உடல்களைக் கூட இன்னும் எண்ண முடியவில்லை என்று அன்வாருல் ஹக் பாகிஸ்தான் ஆக்கரமிப்பு காஷ்மீரின் சட்டமன்றத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
அண்மையில் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றம் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில், இந்திய ஆதரவுடன் செயல்படும் தீவிரவாதிகள் ஈடுபட்டதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டினார். இஸ்லாமாபாத் கார் குண்டுவெடிப்புக்குப் பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு பலம் உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் பேசிவரும் க்வாஜா ஆசிப், கிழக்கு எல்லையில் இந்தியாவுக்கும், மேற்கு எல்லையில் தலிபான்களுக்கும் எதிரான இருமுனை போருக்குப் பாகிஸ்தான் முழு அளவில் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். இந்தியாவுடனான முதல் சுற்று போரில் இறைவன் பாகிஸ்தானுக்கு உதவியது போல், இரண்டாம் சுற்று போரிலும் உதவுவார் என்றும் தெரிவித்துள்ள அவர், இறுதிச் சுற்றை இந்தியா விரும்பினால், முழுப் போரைத் தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு ட்ரைலர் தான் என்று கூறிய இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, ஆப்ரேஷன் சிந்தூர் ஒன்றில் காட்டிய நிதானத்தை ஆப்ரேஷன் சிந்தூர் இரண்டில் காட்டப் போவதில்லை என்றும், போருக்கு முழுமையான தயார் நிலையில் இந்தியா உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய உபேந்திர திவேதி, ஆப்ரேஷன் சிந்தூர் இரண்டில் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்குமா என்று யோசிக்க வேண்டிய அளவுக்குத் தாக்குதல்கள் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரித்திருந்தார்.
















