டிட்வா புயல் இலங்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்ட நிலையில், மீட்பு, நிவாரணப் பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை. நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை புதிய உயரத்தை தொட்டுள்ள நிலையில், அந்நாடு இரண்டாவது அபாய அலையை எதிர்கொண்டுள்ளது.
நவம்பர் 27, 28ம் தேதிகளில் இலங்கையை தாக்கிய டிட்வா புயல், அனைத்து மாகாணங்களிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. கண்டி, பதுளை, நுவரேலியா உள்ளிட்ட பகுதிகளில் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளமும், தொடர் நிலச்சரிவும், தீவு நாட்டில் பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியதோடு, உயிர்களையும் பலிகொண்டது.
தொடர்ச்சியான கன மழையால், இலங்கையில் உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டியதால், கரையோர பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன… பெரு வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள் இலங்கையை விட்டு அகலாத நிலையில், அதன் தாக்கத்தைப் பற்றி அறிக்கையை அதிகாரிகள் வெளியிட்டனர். நிலச்சரிவு பல்லாயிரக்கணக்கான மக்களை வேறு இடத்திற்கு இடம்பெயரச் செய்துள்ளது. மத்திய மலைப்பகுதி, வடமேற்கு மலை பகுதிகள் அபாயம் நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
டிட்வா புயல் பாதிப்பால் இலங்கையில் 10 சதவிகித மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். வெள்ளம் மற்றும் மீட்பு பணிகளில் ஹெலிகாப்டரகளும், விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மண்ணில் புதைந்த உடல்கள் அடுத்தடுத்த மீட்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 618 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பற்றி விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை. இதனால் அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. 75 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் ஐந்தாயிரம் வீடுகள் இருந்த அடையாளமே இல்லை என்று அரசு கூறுவது பாதிப்பின் ஆழத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.
இலங்கை முழுவதும் வெள்ள நீர் வடிந்துவரும் நிலையில். அரசு நடத்தும் முகாம்களில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து 25 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சம் ஆகக் குறைந்திருக்கிறது. பலரும் தங்களது பகுதிகளுக்குத் திரும்பியிருக்கும் நிலையில், உடைமைகள் அனைத்தையும் இழந்திருப்பதாகவும், உயிர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.
2022 ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலையிலிருந்து மீண்டு வந்த இலங்கை, தற்போது மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. மறுகட்டமைப்பு செய்வதற்கான செலவினம் தீவு நாட்டை ஆட்டம் காணச் செய்யும் நிலையிலேயே உள்ளதால், 200 மில்லியன் டாலர் வழங்கி உதவுவதாகக் கூறியிருக்கிறது சர்வதேச நாணய நிதியம்.
இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத் தக்க அளவில் மீட்சியடைந்துள்ளதாகவும், ஆனால் சமீபத்திய அதிர்ச்சியைத் தாங்கும் அளவுக்கு அது வலுவாக இல்லை என்றும் அதிபர் அனுர குமார திசாநாயக்க கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. பாதிப்பில் இருந்து இலங்கை மீண்டாலும், உடைமைகளை, உறவுகளை இழந்த மக்கள் மீண்டும் முதலில் இருந்து தங்களது வாழ்க்கையை தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது உண்மையில் வேதனையின் உச்சம்தான்.
















