விவசாயிகளின் இன்னல்களைப் போக்கும் வகையில் கடலோரப் பகுதிகளில் இறால் பண்ணைத் தொழில் முறைப்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியின் நிலை என்ன என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தாங்கள் கொடுத்த இந்த வாக்குறுதியை நீங்கள் தூக்கியெறிந்ததால், கடலோர மாவட்டங்களில் சட்டவிரோத இறால் பண்ணைகள் பல்கிப்பெருகி வருவதோடு, அவற்றில் இருந்து வரும் கழிவுநீர், நிலத்தடி நீரோடு கலந்து, நீராதாரத்தைச் சிதைத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதனால் வயிற்று வலி தொடங்கி தோல் வியாதிகள், கிட்னி பாதிப்புகள் எனப் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு, கடலோரப் பகுதி மக்களின் எதிர்காலமே நிர்மூலமாகி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், விவசாயமும் சீரழிந்து வருகிறது. கடலோர மாவட்ட மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகளைக் கட்டித் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றவில்லையென்றால், அவர்களின் வாழ்விடங்களை மாசுபாடின்றி வைத்திருக்கும் இந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற மனமில்லாத அறிவாலய
அரசின் மறதிக்கும் அக்கறையின்மைக்கும் கடலோர மாவட்ட மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
















