ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மன உறுதியை வழங்கும் வகையில் இந்திய ராணுவம் கொரில்லா போர்முறை பயிற்சிகளை வழங்கி வருகிறது. பெண்கள் உட்பட கிராம மக்களுக்கு இந்திய இராணுவம் எவ்வாறு பயிற்சி அளிக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்…
ஜம்மு காஷ்மீரில் செனாப் பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்கள், காடுகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ளன. அங்கு பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்த நிலையில், பாதுகாப்புப் படையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தோடா மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு நமது ராணுவம் கொரில்லா போர் முறையிலான அடிப்படை பயிற்சிகளையும் வழங்கி வருகிறது….
தோடா – சாம்பா எல்லையில் உள்ள 17 தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த 150 கிராம பாதுகாப்பு காவலர்கள், பெண் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். தானியங்கி ஆயுதங்களை கையாளுதல், அடிப்படை போர் பயிற்சிகள, தற்காப்பு, பதுங்குக் குழி கட்டுமானம், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளுதல் போன்றவற்றில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
தோடா மாவட்டத்தில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷிங்கினி கிராமத்தில் இந்தப் பயிற்சியானது அளிக்கப்படுகிறது. தங்களது கிராமங்களை பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல் ஆளாக நிற்கும் துணிவை ஏற்படுத்துவதுமே இந்த பயிற்சியின் நோக்கம் என்று ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில், செனாப் பள்ளத்தாக்கின் உயர் பகுதிகளில், ராணுவம், காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்த முயற்சி நிறைவு செய்யும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் வழங்கப்பட்ட பயிற்சி VDG உறுப்பினர்களிடையே மன உறுதியை அதிகரித்துள்ளது. ஆயுத பயிற்சி பெறும் பொதுமக்கள், தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சி ஊக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறுகின்றனர்.
அத்துடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நடவடிக்கைகளுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். 1990ம் ஆண்டுகளில் இங்கு அடிக்கடி நடந்த பயங்கரவாத தாக்குதல்களை நினைவுகூர்ந்த பொதுமக்கள், அதிக தானியங்கி ஆயுதங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
ஊதியம் பெறாத VDG உறுப்பினர்களுக்கு கௌரவ ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறிய பொதுமக்கள், கிராமங்களில் பதுங்கு குழிகள் கட்டுவது குடியிருப்பாளர்களிடையே பயத்தைக் குறைக்க உதவியுள்ளது என்றும் கூறுகின்றனர்.
பயங்கரவாத குழுக்களுக்கு உள்ளூர் ஆதரவு தளத்தை மறுத்து, பிராந்தியத்தில் நீடித்த அமைதியை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று கூறப்படும் நிலையில், இத்தகைய பயிற்சி எல்லை பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















