சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த டிசம்பர் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனை தொடர்ந்து, நான்கு மாட வீதிகளில் தேர்கள் வலம் வர, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ‘சிவ சிவா கோஷம்’ விண்ணை பிளந்தது.
சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தையொட்டி ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை நடராஜ மூர்த்திக்கு மகாஅபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
















