வெனிசுலாவுக்கு எண்ணெய் ஏற்றச் சென்ற ரஷ்ய கொடியேற்றப்பட்ட காலி எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா கைப் பற்றியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மூலம், ரஷ்யா-அமெரிக்கா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த ஓராண்டாகவே, வெனிசுவேலாவின் வடக்கு எல்லையாக இருக்கும் கரீபியன் கடலில் தனது ராணுவ இருப்பை அமெரிக்கா அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் வெனிசுவேலா கடற்கரையோரத்தில் இருந்த ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்க இராணுவம் கைப்பற்றியது. பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கப்பலின் வீடியோவை வெளியிட்ட அமெரிக்க அட்டர்னி ஜெனரல், வெனிசுவேலா மற்றும் ஈரானிலிருந்து தடைசெய்யப்பட்ட எண்ணெயை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கப்பல் என்று விவரித்திருந்தார்.
அந்தக் கப்பலை ஸ்கிப்பர் என்று அடையாளம் கண்ட கடல்சார் ஆபத்துகளைக் கண்காணிக்கும் வான்கார்ட் டெக் நிறுவனம், நீண்ட காலமாகப் போலியான இருப்பிடத்தையே கூறி வந்ததாகத் தெரிவித்திருந்தது.
ஏற்கெனவே 2022-ஆம் ஆண்டில், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கும் வருவாய் ஈட்டித் தரும் எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அமெரிக்க கருவூலத் துறை ஸ்கிப்பர் கப்பலுக்குத் தடைவிதித்தது. இது அமெரிக்கா நடத்திய மிகப் பெரிய சர்வதேச கடற்கொள்ளை என்று கண்டித்த வெனிசுலா அதிபர் அதிபர் மதுரோ, வெனிசுவேலா ஒருபோதும் அமெரிக்காவின் எண்ணெய் காலனியாக மாறாது என்று அறிவித்தார்.
அதிரடியாகக் கடந்த வாரம் அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபரும் அவரது மனைவியும் புரூக்ளின் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். கடந்த மாதம், “பெல்லா 1” என்ற கப்பலை அமெரிக்க கடலோர காவல்படை ஆய்வு செய்ய முயன்றது. தடைகளை மீறியதற்கும், ஈரானின் எண்ணெயைக் கொண்டு சென்றதற்கும் அதைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், வட அட்லாண்டிக் பெருங்கடலில் வெனிசுலா தொடர்பாக இரண்டாவது எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. 14 நாட்கள் துரத்தலுக்குப் பின் Marinera என்ற எண்ணெய்க் கப்பலை அமெரிக்க மத்திய நீதிமன்ற உத்தரவின் படி கைப்பற்றப் பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னர் பெல்லா-1 என்று அழைக்கப் பட்ட கப்பல், பிறகு ரஷ்யாவில் பதிவு செய்யப் பட்டு ரஷ்ய கொடியுடன் Marinera என்று பெயர் மாற்றப் பட்டது. இது ரஷ்யாவின் நிழல் கப்பல் குழுவைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இக்கப்பல் ஐரோப்பாவை நெருங்கிக் கொண்டிருந்தபோது, (Night Stalkers), நைட் ஸ்டாக்கர்ஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் இராணுவக் கட்டளைப் பிரிவு, பிரிட்டனின் உதவியுடன், இக்கப்பலை கைப்பற்றியுள்ளது.
மேலும் அனைத்து கப்பல் ஊழியர்களையும் கைது செய்துள்ள அமெரிக்கா, அவர்கள்மீது தடைகளை மீறியதற்காகக் கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்று கூறப்படுகிறது. வெனிசுலாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே Marinera கப்பல் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கைப்பற்றிய இந்தக் கப்பலில் எண்ணெய் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் மற்றும் வெனிசுலா இடையே ஆயுதங்கள் உட்பட சட்டவிரோத வர்த்தகம் இந்தக் கப்பல்மூலம் நடத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Marinera கப்பல் ரஷ்யக் கொடியின் கீழ் சர்வதேச கடல் பகுதியில் சட்டப்பூர்வமாகவே பயணிப்பதாகவும் அமைதியாகச் செல்லும் ரஷ்யாவின் கப்பலை அமெரிக்காவும் நேட்டோவும் நியாயமற்ற முறையில் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ள ரஷ்யா, அமெரிக்கா கடல்சார் சட்டத்தை மீறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கிடையே, ஐ.நா.வின் அடிப்படைக் காலநிலை ஒப்பந்தம் மற்றும் மேலும் 65 சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளிலிருந்து அமெரிக்கா விலகும் என்று தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க செனட்டர் கிரஹாம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்புதல் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்க வழிவகை செய்கிறது. இதனால் ரஷ்யா- அமெரிக்கா நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரிப்பது புவி சார் அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
















