தாம்பரத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் செயல் நேர்மையற்ற வகையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தாம்பரத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய உத்தரவிடக்கோரி அதன் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் எனவும், கூடுதல் வாடகை தொகையாக 2.18 கோடி ரூபாயை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்வில் மேல்முறையீடு செய்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், காவல் ஆணையர் அலுவலகத்தை அமைக்க புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் காலி செய்ய உள்ளதாகவும் தெரிவித்ததோடு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பல மாதங்களாக வாடகையும் கொடுக்காமல், இடத்தையும் காலி செய்யாமல் இருக்கும் தமிழக அரசின் செயல்பாடு நேர்மையற்றதாக இருக்கிறது என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 2 மாதங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
















