அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார் எனும் அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில், பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்ட கோப்புகளில், ரஷ்ய பெண்களுடன் ஏற்பட்ட பாலியல் தொடர்பு காரணமாகப் பில் கேட்ஸிற்கு பால்வினை நோய் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதனை தனது மனைவிக்கு தெரியாமல் மறைக்க பில்கேட்ஸ் ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாகவும் புதிய ஆவணங்கள் கூறுகின்றன. 2013-இல் எப்ஸ்டீன் தனக்குத்தானே அனுப்பிக்கொண்ட மின்னஞ்சல்களில் பில் கேட்ஸ் குறித்து இத்தகைய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை பில்கேட்ஸின் செய்தி தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
















