தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, தவெ.க தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். விஜய்க்கு சால்வை அணிவித்து ஆளுநர் வரவேற்றார். மாமல்லபுரம் கடற்கரை கோயில் நினைவுப் பரிசையும் வழங்கினார். இச்சந்திப்பின்போது தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 20 நிமிட சந்திப்பிக்குப்பின் மக்கள் மாளிகையில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார்.இதனிடையே, தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய் உரிமை கோரிய நிலையில், புதிய அரசுக்கு 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜயிடம் ஆளுநர் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்சியமைக்க விஜய் உரிமை கோரியது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் கடிதம் எதுவும் வராத நிலையில், விஜய் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த போதிலும், இதுவரை 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. மேலும், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை நாளை தெரிவிப்பதாக கூறிய நிலையில், விஜய் பதவியேற்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
















