தவெக அரசு அமைக்கும் வரை திமுக காத்திருக்கும் என்றும், 6 மாதங்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் கவனித்துக்கொண்டே இருக்கும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், திமுக அரசியல் நெருக்கடியோ அல்லது விரைவில் மற்றொரு தேர்தலையோ விரும்பவில்லை என கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும், தவெக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டத்தை புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.
தவெக கூறியதுபோல மகளிர் உரிமைத் தொகையை 2 ஆயிரத்து 500 ரூபாய் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம் எனக்கூறிய அவர், குறைந்தபட்சம் மகளிர் உரிமைத் தொகையை ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குடும்ப அட்டைத்தாரருக்கு ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் என்ற வாக்குறுதியை தவெகவால் நிறைவேற்ற முடியும் என்று தாம் கருதவில்லை என்றும்,
அவ்வாறு செய்தால் திமுக மகிழ்ச்சியடையும் எனவும் கூறினார்.
மேலும், தவெக அரசு அமைக்கும் வரை திமுக காத்திருக்கும் என்றும், 6 மாதங்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் கவனித்துக்கொண்டே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
















