பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நலக்குறைவால் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை கொடைக்கானலில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் ஜஸ்டின் மணிகண்டன் கூறியுள்ளார்.
இதனையடுத்து திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
















