ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு இருந்தது சிபிஐ விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றிருந்த காவல் ஆய்வாளர் புஹாரி மற்றும் சரவணன், திருவேங்கடம் என்ற குற்றவாளியை என்கவுண்டர் செய்யும்போது பணியில் இருந்தனர்.
இந்த நிலையில் அகில்குமார் என்ற தொழிலதிபரை மிரட்டி 45 லட்சம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் புஹாரி சிறையில் அடைக்கப்பட்டார். பணம் பறிக்கப்பட்ட வழக்கை கையில் எடுத்த சிபிஐ அதிகாரிகள், சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றிருந்த அனைத்து அதிகாரிகளின் செல்போன்களையும் ஆய்வு செய்தனர்.
அதில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி செந்திலுடன் காவல் ஆய்வாளர் புஹாரி தொடர்பில் இருந்தது அம்பலமாகியுள்ளது. இதனால் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புஹாரியை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக, சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















