தமிழகத்தில் மூன்று மடங்கிற்கு மேல் மின் கட்டணம் வந்த வீடுகளில் அதிகாரிகள் மறுஆய்வு செய்ததில் ஆயிரத்து 300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டது தெரியவந்ததாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் நிலையில், சில பணியாளர்கள் தாமதமாக கணக்கெடுக்க செல்வதால், மானிய சலுகைகள் கிடைக்காமல் அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனை தொடர்ந்து, அதிக மின் கட்டணம் வந்த வீடுகளில் மறுஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவிட்டது. அதன்படி, ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 75 ஆயிரம் வீடுகளில் நடத்தப்பட்ட மறுஆய்வில் ஆயிரத்து 300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டதால், அதிக மின் கட்டணம் வந்திருப்பது உறுதியாகி உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தவறாக மின் கணக்கீடு எடுக்கப்பட்ட வீடுகளில், மின் கட்டணங்கள் திருத்தி வழங்கப்பட்டு, அடுத்த கட்டணத்தில் குறைத்து வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், தவறாக கணக்கெடுத்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















