அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றி விட்டு தாய்நாட்டுக்குத் திரும்பும் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பெங்களூரைச் சேர்ந்த ‘எக்ஸ்ஃபெனோ’ (Xpheno) என்ற தொழில்நுட்பத் திறமையாளர் தீர்வு நிறுவனம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு ஏற்கெனவே வெளிநாட்டில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றி விட்டு இந்தியா திரும்பும் தொழில்நுட்ப வல்லுனர்களின் எண்ணிக்கை 7,300-யைத் தொட்டுள்ளதாக தரவுகளுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
2024-ல் 9,800-ஆக இருந்த இந்த தாயகம் திரும்புவோரின் எண்ணிக்கை 2025-ல் 15,100-ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டு இன்னும் அதிகமானோர் தாயகம் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் அமெரிக்கா செல்லும் இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதுவரை சுமார் 9,100 பேர் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர் என்று தரவுகள் காட்டுகின்றன.
சமீபத்தில் அடோப் (Adobe) நிறுவனத்தின் பொறியியல் பிரிவு இயக்குநரான கௌரி சங்கர் ரவீந்திரன், கலிபோர்னியாவில் பத்து ஆண்டுகள் வசித்த பிறகு தனது குடும்பத்துடன் பெங்களூருக்குக் குடிபெயர்ந்துள்ளார்.
இது குறித்து தனது LinkedIn பக்கத்தில் பதிவிட்டுள்ள கௌரி சங்கர் ரவீந்திரன், இது ஒரு முக்கியமான மாற்றம் என்றும் குடும்பத்தினருக்கு அருகில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவே இந்தியா திரும்பியதாகவும் பெங்களூரு வாழ்க்கைக்குத் தங்களை மாற்றிக்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவிலிருந்தபடியே அடோப் நிறுவனத்தின் CXO பிரிவிற்காக தொடர்ந்து பணியாற்றுவதில் உற்சாகமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக Meta நிறுவனத்தின் மூத்த பொறியியல் தலைவரான பாலாஜி குருராஜன், 18 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய பிறகு பெங்களூருக்குக் குடிபெயர்ந்ததை தனது LinkedIn பதிவில் பகிர்ந்துகொண்டார்.
அதில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து குடும்பத்தின் முக்கியமான நிகழ்வுகளை வேடிக்கை பார்ப்பதற்குப் பதிலாக, அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதற்காகவே இந்த தனிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
இதே காரணத்துக்காகவே கடந்த ஏப்ரல் மாதத்தில், தனது ‘ஓபன்ஏஐ’ (OpenAI) நிறுவனத்தின் B2B செயலிகளுக்கான தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி என்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு தாய் நாட்டுக்குத் திரும்பியதாக ஸ்ரீனிவாஸ் நாராயணன் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக 1,276 தொழில்முறை நிபுணர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 53 சதவீதத்தினர் விசா தொடர்பான நிச்சயமற்ற தன்மை காரணமாகவே இந்தியாவுக்குத் திரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கெல்லாம் அதிபர் ட்ரம்பின் இரண்டாவது பதவி காலத்தில் ஏற்பட்டுள்ள குடியேற்ற கொள்கை மற்றும் H-1B விசா நடைமுறைகளில் கொண்டுவந்துள்ள மாற்றங்களும் குழப்பங்களுமே முக்கிய காரணங்களாக சொல்லப் படுகிறது.
இதற்கிடையே அமெரிக்காவில் பணிபுரியும் பல இந்தியர்கள் தங்கள் வேலையைப் பறித்து கொள்கின்றனர் விசா மோசடிக்காரர்கள் என்றும் தீவிர வலதுசாரி அமெரிக்கர்கள் குற்றஞ்சாட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த டிசம்பரில், ‘ஃபெடெக்ஸ்’ (FedEx) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ராஜ் சுப்ரமணியம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, அவர் இந்தியர்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகப் குற்றம்சாட்டப் பட்டு, சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.
பல ஆண்டுகள் முன்னதாகவே Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தியாவுக்கே திரும்பி வருமாறு வலியுறுத்தியிருந்தார்.
குடியேற்றச் சிக்கல்கள் குறித்த அச்சம் ஏதுமின்றி ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது, சரியான முடிவைத்தான் எடுத்துள்ளேன் என்பது புரிந்தது என்றும், சொந்த ஊரில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அமெரிக்காவில் இருந்து விட்டு இந்தியா திரும்பிய ஒருவர் சந்தோஷமாக பதிவிட்டுள்ளார்.
















