தமிழ்நாட்டில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு, 4 ஆயிரத்து 414 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தொழில் வளர்ச்சி மற்றும் பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக 16 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதநீர், பனங்கருப்பட்டி உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பனைப் பொருட்களுக்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்டு, பனை விவசாயிகளின் வாழ்வாதாரமும் வருமானமும் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருப்பூரில் 10 கோடி ரூபாய் மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படுவதுடன், கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த் துறையின் வளர்ச்சிக்காக ஆயிரத்து 678 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பசுமை எஃகு உற்பத்தி முன்முயற்சிக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதற்காக நடப்பாண்டில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 4 ஆயிரத்து 414 கோடி ரூபாயும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு 2 ஆயிரத்து 142 கோடி ரூபாயும், ஜவுளித் துறைக்கு 60 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் வளர்ச்சிக்காக மொத்தம் 398 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் சேவைகள் மற்றும் புதுமையான தொழில் முனைவுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















