இயல்பாகவே கடைப்பிடிக்கப்பட்ட எச்சரிக்கையான அணுகுமுறை மாறி, தன்னம்பிக்கையுடனான முதிர்ச்சி இந்திய வெளியுறவுக் கொள்கையாக உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியாவின் தாக்கம் உலக அரங்கில் மேலோங்கி உள்ளது. தொலைநோக்குப் பார்வை, சரியான தருணத்தை உணரும் திறன் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றின் தனித்துவமான கலவையைக் கொண்ட பிரதமர் மோடி ஒரு தலைசிறந்த தலைவராகவும் உலகளாவிய ஆளுமையாகவும் திகழ்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தேச நலனுக்கு முதன்மை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற குறிக்கோளுடனும் அண்டை நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம், பூட்டான் என பக்கத்து நாடுகளில் அரசியல் தடுமாற்றங்கள், இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்ட காலங்களில் இந்தியா தொடர்ந்து அத்தியாவசிய உணவு மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட பெருமளவில் நிதியுதவிகளை வழங்கி வருகிறது.
சமீபத்தில் பேரழிவு ஏற்படுத்திய திடீர் வெள்ளத்திலிருந்து நேபாளம் மீண்டெழுவதற்காக தினமும் 654 மெகாவாட் வரை மின்சாரத்தை இந்தியா உடனடியாக ஏற்றுமதி செய்துள்ளது.
பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை, அண்டை நாடுகளின் பொருளாதாரங்களை இந்தியாவின் வளர்ச்சியுடன் நேரடியாக இணைத்து அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக மாற்றியுள்ளது.
அமெரிக்காவுடன் மிக ஆழமான கூட்டாண்மையை வளர்த்தெடுத்துள்ள இந்தியா, அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாமல் அமெரிக்காவின் அழுத்தங்களைப் புறக்கணித்து, உள்நாட்டு எரிசக்திப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, ரஷ்யாவுடனான வரலாற்று உறவையும் மேம்படுத்தி வருகிறது.
சீனாவுடன், இந்தியா வியூக ரீதியான பொறுமையையும் உறுதியையும் வெளிப்படுத்தி வருகிறது.
குறிப்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பை ‘மேற்கத்திய எதிர்ப்பு’ என்பதற்குப் பதிலாக ‘மேற்கத்திய சார்பற்றதாக’ இருப்பதை பிரதமர் மோடி உறுதிபடுத்தியுள்ளார்.
ஐந்து மத்திய ஆசியக் குடியரசுகளுக்கும் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற பிரதமர் மோடி, ஆசியான் நாடுகளுடனான உறவுகளை ஆழப்படுத்தியதுடன், ‘ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கையை உருவாக்கி விரிவான இந்திய -பசிபிக் கடல்சார் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.
குறிப்பாக இந்தியப் பெருங்கடல் முழுவதும் இந்தியாவை ஒரு கடல் பாதுகாப்பு சக்தியாக பிரதமர் மோடி நிலைநிறுத்தியுள்ளார்.
மேலும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் போன்ற இணைப்பு கட்டமைப்புகளைப் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை சாத்தியப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் பதவி காலத்தில் தான் ஆப்பிரிக்காவில் மட்டும் மொத்தமாக 18 இந்தியத் தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் ராணுவத் தயார்நிலை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றையும் தாண்டி, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சுகாதார மீள்திறன் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகவும் பிரதமர் மோடி தனது அரசாட்சியின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளார்.
லத்தீன் அமெரிக்கா, கரீபியன், மத்திய அமெரிக்கா, பசிபிக் தீவுகள், மங்கோலியா, நார்வே ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பிரதமர் மோடி வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதால் இந்தியாவின் உலகளாவிய தடம் என்பது மேலும் விரிவடைந்து வருகிறது.
மேலும் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கான ஒரு முக்கிய மையமாக, மற்றும் வேகமாக மாறிவரும் சர்வதேச ஒழுங்கின் விதிகளை வடிவமைக்கும் ஒரு முன்னணி சக்தியாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா விளங்குகிறது.
உலக அரங்கில், புவிசார் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான வேறுபாடுகளைக் கடந்து உண்மையான நல்லுறவை வளர்க்கும் அரிய உலகத் தலைவராக பிரதமர் மோடி நிமிர்ந்து நிற்கிறார்.
இஸ்ரேல் பிரதமரை அன்புடன் கட்டிப்பிடிப்பதும், அதே நேரத்தில் ஈரான் அதிபருடன் கைகோர்த்து நடப்பதும் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் கைக் குலுக்கும் அதே நேரத்தில் சீன அதிபருடன் கைக் குலுக்குவதும் ரஷ்ய அதிபரைக் கட்டிப்பிடிக்கும் அதே நேரத்தில் உக்ரைனுக்குச் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்திப்பதும் இதுவரை உலகில் எந்த நாட்டுத் தலைவரும் செய்யாதவை.
எனவே தான் உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் பிரதமர் மோடியைப் பாராட்டுகிறார்கள். இந்தியாவை விஸ்வ குருவாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
















