தமிழகத்தில் உள்ள 77 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கு மறுசீரமைப்பு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், 2014 முதல் சுமார் ஆயிரத்து 350 கிலோ மீட்டர் நீளத்திற்குப் புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒட்டுமொத்த இலங்கையின் ரயில்வே தண்டவாளத்தின் நீளத்திற்கு இணையானது என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் 2014 முதல் இரண்டாயிரத்து 386 கிலோ மீட்டர் அளவிற்கு 97 சதவீதம் மின் மயமாக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இந்த ஆண்டு நிறைய கட்டுமானங்களும், புதுமை வாய்ந்த விஷயங்களும் ரயில்வேயில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.
பயணிகளுக்கு எவ்வித சிறு இடையூறுகளும் ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம் என்றும், தமிழக ரயில்வேயின் முகவரி இனி சர்வதேச தரத்தில் மாறும் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
















