சேலத்தில் ஜீவசமாதி அடைய அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது.
சேலம் மாவட்டம், அரியானூர் அருகே கஞ்சமலை அடிவாரத்தில் சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியர் என்பவர் ஆசிரமம் நடந்தி வந்தார். இவரது ஆசிரமத்தில் 101 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளிட்ட பல்வேறு தெய்வ சிலைகள் உள்ளன.
பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களையும் அளித்து வந்தார். கோடிக்கணக்கில் சொத்துக்களையும் வாங்கி குவித்த சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியர், பிப்ரவரி 2ஆம் தேதி ஜீவசமாதி அடைவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியரின் முடிவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில், ஆசிரமத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அதிகாலை 60 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக, போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியர் காலை 10 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
















