தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், விசேஷ நாட்களில் சாதாரண பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் வேளையில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி தரிசனத்தில் அத்துமீறுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த தைப்பூசத் திருவிழாவின் போது, பழனி, திருச்செந்தூர், மருதமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இதனிடையே, சில கோயில்களில் உள்ளூர் அரசியல்வாதிகள், போலீஸ், முக்கிய பிரமுகர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நீதித்துறையினர் உள்ளிட்ட பலர் அதிகார பலத்துடன் அத்துமீறி, குறுக்கு வழியில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு என தனியாக நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் மட்டுமே அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் விதிகளுக்குப் புறம்பாக நுழைவோரை தடுக்கும் அதிகாரத்தையும், பணிப்பாதுகாப்பையும் கோயில் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலையிட்டு, சாதாரண பக்தர்களின் தரிசன உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
















