திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளான தை உத்திரத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டு தை உத்திரத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தங்க கொடி மரம் அருகில் வைக்கப்பட்ட கும்ப கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளின் விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















