மாணவர்கள் இணைய தளத்தில் நேரத்தை வீணாக்கக் கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், ஆண்டுதோறும் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். வழக்கமாக டெல்லியில் மட்டும் நடக்கும் இந்த நிகழ்வு, நடப்பாண்டு , தமிழ்நாடு, குஜராத், சத்தீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களிலும் நடைபெற்றது.
டெல்லியில் நடந்த பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியின் 9வது பதிப்பின்போது பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பேசிய பிரதமர் மோடி, 2047ல் மாணவர்கள் அனைவருக்கும் 35 முதல் 40 வயது நிரம்பி இருக்கும் என்றும், அப்போது உங்களைச் சுற்றி எத்தனையோ விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.
வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்காக அரசு கடினமாக உழைக்கும்போது மக்களும் அதற்காக உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல், நாம் இந்தியப் பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இணையசேவை குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக மாணவர்கள் இணைய தளத்தில் நேரத்தை வீணாக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்
















