அரசுமுறைப் பயணமாக மலேசியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட அரசு விருந்தில், தமிழகத்தின் பெருமைமிக்க அடையாளமான எம்ஜிஆர் அவர்களின் “நாளை நமதே” என்ற புரட்சிகரமான திரைப்படப் பாடல் பாடப்பட்டிருப்பது நமக்கான பெருமை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், சாதாரண ஏழைத் தாய்க்கு மகனாகப் பிறந்து, தமிழ்த் திரையுலகில் தமது பொது வாழ்க்கையைத் துவங்கி, பின்பு தமிழக அரசியலில் ஆகப்பெரும் ஆளுமையாகத் திகழ்ந்ததோடு, தமது ஈகை குணத்தால் பொன்மனச் செம்மல் என இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு, கடல் கடந்த நாடுகளின் தலைவர்களும் ரசிகர்களாக இருப்பதைக் கண்டு ஒரு தமிழனாக நான் கர்வம் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், துவளும் மனதைத் தாங்கிப் பிடிக்கும் உத்வேகப் பாடலாகத் தமிழக மக்களின் மனதினை ஆக்கிரமித்திருக்கும் “நாளை நமதே” என்ற பாடலை, நமது பாரதத்தின் வளர்ச்சியை வெற்றிப் பாதையில் தூக்கிச் சுமக்கும் தன்னலமற்ற தலைவர் நரேந்திர மோடிக்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அர்ப்பணித்துள்ளது ஆகப் பொருத்தமானது என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, “காலங்கள் எனும் சோலைகள் மலர்ந்து, காய் கனியாகும் நமக்கென வளர்ந்து” என்ற அப்பாடலின் வரிகள் பிரதமர் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையான “வளர்ந்த பாரதம்” என்ற இலக்கையும், இன்னும் சிறிது காலத்தில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் அரசியல் மாற்றங்களையும் அப்படியே அடிக்கோடிட்டுக் காட்டுவது போலவே இருப்பது தற்செயலான அதிசயம் என்றும் தெரிவித்துள்ளார்.
பிற நாட்டு அதிபர்கள்பாரதப் பிரதமர் அவர்களை எதிர்காலத்தின் நம்பிக்கையாகப் பார்க்கிறார்கள் என்பதற்கான சான்றான இந்நிகழ்வைத் தொடர்ந்து எத்தனை முறை பார்த்தாலும் திகட்டவே திகட்டாது என்றும் நயினார் புகழாரம் சூட்டியுள்ளார்.
















