கும்பகோணம் அருகே பாஜக மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க அக்கட்சியினர் குவிந்ததால் பதற்றம் நிலவியது.
தஞ்சாவூர் பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் தனது காரில் திருவாரூருக்கு சென்று விட்டு கும்பகோணம் நோக்கி வந்துள்ளார்.
திருச்சேறை அருகே சென்றபோது, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 15க்கும் மேற்பட்டோர் காரை மோதுவது போல் வந்ததால், ஓரமாக செல்லுமாறு செல்வராஜ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, மதுபோதையில் இருந்த நபர்கள் கல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் காரை அடித்து நொறுக்கியுள்ளனர்.
தடுக்க முயன்ற ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை பலமாக தாக்கியுள்ளனர். இதனை கண்டு பொதுமக்கள் ஓடி வந்ததால் மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் தொடர்பாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் புகார் அளித்துள்ளார்.
அப்போது, நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் பாஜகவினர் குவிந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
















