தமிழக ரயில்வே திட்டப் பணிகள் தாமதப்படுவதற்கு, நிலம் கையகப்படுத்தப்படாததே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்தியC பதிலளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,
2026-27ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு 7 ஆயிரத்து 611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை எனக் கூறியுள்ள அஸ்வினி வைஷ்ணவ்,
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான 4 ஆயிரத்து 326 ஹெக்டேர் நிலத்தில் 24 சதவீதம் மட்டுமே தமிழக அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு ஏற்கனவே ஆயிரத்து 465 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும்,
மாநில அரசிடம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிலுவையில் உள்ளதால், பல முக்கிய திட்டங்கள் தாமதமாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
2019ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை வழியாக மதுரை – தூத்துக்குடி புதிய வழித்தடத்திற்கு 91 சதவீதம் நிலம் கையகப்படுத்தாமல் நிலுவையில் உள்ளது என்றும்,
திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை புதிய வழித்தடத்திற்கு 86 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், நிதிப் பற்றாக்குறையால் திட்டங்கள் முடங்கவில்லை என விளக்கம் அளித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர், முதலமைச்சரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என தெரிவித்துள்ளார்.
















