சட்டமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க தேமுதிகவினர் ஆர்வம் காட்டாததால் தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 5ஆம் தேதி அறிவித்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வழங்கும் பணியை தொடங்கிய தேமுதிக, பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் என தெரிவித்தது. இந்நிலையில், நான்காவது நாளில் விருப்ப மனு பெற கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக, அதிமுக, தவெக என அனைத்து கட்சிகளும் விருப்ப மனுக்கள் விநியோகித்து வரும் நிலையில், தேமுதிக அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















