பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டிய பாஜகவினர் திமுக அரசை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக தெரிவித்துள்ள பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக விரட்டியடிக்கப்பட வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னர் அரசுக்கு எதிரான முழக்கங்களை பாஜகவினர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் எழுப்பினர். இதனையடுத்து பேசிய பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் கவிதா சுரேஷ் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கஞ்சா உள்ளிட்ட போதை கலாச்சாரங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை திமுக அரசு கண்டும் காணாதது போல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
















