வடமாநில தொழிலாளி மீது போதை சிறார்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
திருத்தணியில் ரயிலில் சென்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரை 4 சிறார்கள் தாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதில் படுகாயமடைந்த வடமாநில தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சில தினங்களிலேயே மாயமானார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த டெல்லியில் உள்ள மனித உரிமைகள் ஆணையம் பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழக அரசு முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டியதோடு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் சிறார்களால் பாதிக்கப்பட்டு மாயமான சுராஜை விரைவில் கண்டுபிடித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும் என காவல்துறைக்கு ஆணையிட்ட மனித உரிமைகள் ஆணையம், பாதிக்கப்பட்ட நபருக்கு நிவாரணமாக 2 லட்சம் ரூபாயை வழங்க ஏன் பரிந்துரைக்க கூடாது எனவும் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
















