தான் எழுதிய புத்தகத்தின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவானே பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
முன்னாள் ராணுவ தளபதி நரவானே, ‘Four Stars of Destiny’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகம் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த புத்தகத்தை வைத்து மக்களவையில் ராகுல் மத்திய அரசை விமர்சித்து பேசினார். இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக வெளியாகாத இந்த புத்தகம் சமூக ஊடகங்களில் வெளியானது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இந்த புத்தகத்தின் உரிமையை வைத்துள்ள பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனம், சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது.
மனோஜ் முகுந்த் நரவனே எழுதிய புத்தகத்தின் உரிமை எங்களிடம் உள்ளது. இந்த புத்தகம் இன்னும் பதிப்புக்கு செல்லவில்லை. இந்த புத்தகத்தின் அச்சிடப்பட்ட பிரதிகள் அல்லது டிஜிட்டல் வடிவில் என எதையும் நாங்கள் வெளியிடவோ, விற்பனை செய்யவோ இல்லை. பிடிஎப், அச்சு அல்லது டிஜிட்டல் முறையில் இந்த புத்தகத்தின் பிரதிகள் இருந்தால், அது காப்புரிமையை மீறியது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காத நரவானே தற்போது முதல் முறையாக மனம் திறந்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் புத்தகத்தின் தற்போதைய நிலை எனக்கூறி பென்குயின் நிறுவனம் வெளியிட்ட பதிவை அவர் மறுபதிவு செய்து உள்ளார்.
















