ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னையில் நடந்த இந்தியா டுடே கருத்தரங்கு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், 2021 சட்டமன்ற தேர்தலை விட இந்த தேர்தல் கடினமாக இருக்காது என்றும், திமுகவின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி வெற்றி பெறுவோம் எனவும் கூறினார்.
எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் திமுக கூட்டணிதான் தேர்தலில் வெல்லும் என்றும், கூட்டணியில் குழப்பம் என திட்டமிட்டு பரப்பப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
திமுக – காங்கிரஸ் இடையே குழப்பம் இல்லை எனக்கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என மற்றவர்கள் நினைப்பது நடக்காது என குறிப்பிட்டார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது என்றும், மற்றவர்கள் நினைப்பது நடக்காது எனவும் கூறினார்.
மேலும், ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது எனக்கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முதலமைச்சரின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என குறிப்பிட்டுள்ளார். 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது காங்கிரசின் தவறு எனவும் கூறியுள்ளார்.
இதன்மூலம் 2006ஆம் ஆண்டு திமுக மைனாரிட்டி அரசு அமைத்தபோது காங்கிரஸ் ஆதரவு தந்ததை மறைமுகமாக மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















