அணுமின் நிலையங்களைப் பொறுத்தவரை, முதலில் பாதுகாப்பு, அதன் பின்னரே உற்பத்தி என்பதை மத்திய அரசு தனது கட்டாயக் கொள்கையாகக் கடைபிடித்து வருவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, கூடங்குளம் அணு உலை அமைக்கப்படும்போது உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டங்களால் திட்டம் தாமதமானதைச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, கூடங்குளம் அணு உலை முதலில் கேரளாவில் அமைய வேண்டியது என்றும், ஆனால் அவர்கள் மறுத்ததால் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், அணு உலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அண்டை மாநிலங்களுக்கு, கூடங்குளத்தில் இருந்து ஏன் மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மின் பகிர்வு என்பது முந்தைய அரசாங்கங்கள் வகுத்த கொள்கை முடிவுகளின் அடிப்படையில் மின்சக்தி துறையால் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
அணுமின் நிலையங்களைப் பொறுத்தவரை முதலில் பாதுகாப்பு, அதற்கு பிறகுதான் உற்பத்தி என்பதை கட்டாயமான கொள்கையாக மத்திய அரசு கடைபிடித்து வருவதாகவும் தெரிவித்தார்.
















