பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒடிசா மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 415 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக அமைக்கப்படும் புவனேஷ்வர் ரயில் நிலையம் குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற ஒடிஷா மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள கட்சியை வீழ்த்தி பாஜக தனது ஆட்சியை அமைத்தது. முதல்வராக மோகன் சரண் மாஜி பொறுப்பேற்ற பின் மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரத்தை டில்லி, மும்பை சென்னை போல் வளர்ந்த நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் மத்திய அரசு, தினசரி லட்சக்கணக்கான ரயில் பயணிகள் வந்து செல்லும் புவனேஸ்வர் ரயில் நிலையத்தை 415 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரயில்நிலையமாக மட்டுமில்லாமல், பேருந்து முனையம், பிரம்மாண்ட வணிக வளாகங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படும் இந்த மல்டி மாடல் மையம் நடப்பாண்டின் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
ரயில் நிலையத்தை விமான நிலைய தரத்திற்கு உயர்த்த ஆறு நடைமேடைகளையும் இணைக்கும் 108 மீட்டர் நீளமுள்ள ஏர்-கான்கோர்ஸ் அமைக்கப்படுகிறது. 34 மின்தூக்கிகள், 20 நகரும் படிக்கட்டுகள், ஓய்வறைகள், உணவு வளாகங்கள் மற்றும் நவீன கியோஸ்க்குகள் இடம் பெறுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. 11 மாடி மேற்குத் தொகுதி மற்றும் 3 மாடி கிழக்குத் தொகுதி கட்டடங்கள், பசுமை நிலப்பரப்பு, EV சார்ஜிங் நிலையங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் இருப்பதால் புவனேஷ்வர் நிலையம் ஒடிசாவின் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடநெருக்கடி மிகுந்த பகுதியில் முப்பரிமாண மாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மிகத்துல்லியமாக இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. புவனேஸ்வரில் ஒரே கூரையின் கீழ் பஸ் மற்றும் ரயில் சேவைகள் இணைக்கப்படுவது முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவின் இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் வாயிலாக பயணிகள் ஒரு வாகனத்திலிருந்து மற்றொரு வாகனத்திற்கு மாறுவதற்கான பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. பாஜக ஆட்சி அமைந்த பின்பு அங்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த மல்டி மாடல் மையம் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒடிஷாவை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
















