மகா சிவராத்திரி முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், பாஜக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் தங்கதுரை அளித்துள்ள மனுவில், மகா சிவராத்திரியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இரவு நேர சிறப்பு பூஜைக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பாரம்பரிய பாதையான பழனியாண்டவர் கோவில் பகுதியில் உள்ள மலையின் படிக்கட்டுகள் வழியாக அனுமதிக்கவும், உரிய பாதுகாப்புகள் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
















