மத்திய அரசின் நிதி என்பது இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய பணமல்ல என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் விமர்சனங்களுக்கு, மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
அப்போது, நடப்பு நிதியாண்டில் தனிநபர் வருமான வரி வசூல் அதிகரித்திருப்பது நடுத்தர வர்க்கத்தினர் ஒடுக்கப்படுவதைக் காட்டுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அதிக வரி வசூல் என்பது நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையே காட்டுவதாகக் கூறினார்.
தொடர்ந்து, பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தன்னிறைவு பெற்ற இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான நாட்டின் உறுதியை நிரூபிப்பதாக கூறினார்.
பல்வேறு நலத் திட்டங்களில் செலவினங்களை குறைத்ததாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டையும் அவர் எதிர்த்தார்.
மேலும், மத்திய அரசின் நிதி என்பது இலவசமாக பயன்படுத்தும் பணமல்ல என்றும், அது குடிமக்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணம் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
















