பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுப்பதாக மாணவரின் தந்தை டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடித்துள்ள வேளாரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன், கண்மணி தம்பதியர். இவர்களின் மூத்த மகன் சஞ்சீவ் சபரி அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவரை பள்ளியின் தலைமையாசிரியர் சீலா கடந்த 1 ஆண்டிற்கு முன்பு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தந்தை சரவணன் முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் தெரிவித்து தலைமை ஆசிரியர் கண்டிக்கப்பட்ட நிலையில் அதன்பின் அடிக்கடி மானவனை வேறு சில காரணங்களை கூறி தொடர்ச்சியாக பழிவாங்கும் நோக்கத்தோடு தலைமை ஆசிரியர் அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தந்தை சரவணன் மீண்டும் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் வட்டார கல்வி அலுவலர் பள்ளிகே சென்று விசாரணை நடத்தியபோது தலைமையாசிரியர் தனது ஆதரவாளர்களை வைத்து தந்தை சரவணனை மிரட்டியுள்ளார்.
மேலும் தனக்கு கொலை மிரட்டலும் விடுப்பதாகக் கூறி எஸ்.பியிடம் தந்தை சரவணன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து எஸ்.பி. உத்தரவின்படி டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
















