திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் தருமசம்வர்த்தினி சமேத கம்பகரேஸ்வர சுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
இக்கோயிலில் கடந்த 2024 ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இங்கே 2007ம் ஆண்டு திருப்பணியின் போது தேக்கு மரத்தால் ஆன கொடி மரத்தை அகற்றிவிட்டு ரோஸ் வுட் மரத்தால் ஆன கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கும்பாபிஷேகத்தின் போது கொடிமரம் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் கொடிமரம் திடீரென சரிந்து மண்டபத்தில் சாய்ந்தபடி நின்றது. கொடி மரத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே கொடிமரம் சாய்ந்துள்ளது என்பது தெரியவந்தது.
வேறு எந்த அசம்பாவிதமும் ஏற்படாத நிலையில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
















