சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், கடந்த 12 நாட்களில் 4 ஆயிரத்து 385 டெண்டர்களை தமிழக அரசு துறைகள் வெளியிட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும்.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாகவே அனைத்து துறைகளிலும், புதிய பணிகளுக்கு டெண்டர் விட அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
சாலை மற்றும் குடிநீர் குழாய் சீரமைப்பு, மருத்துவமனை கட்டடம் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 12 நாட்களில் 4 ஆயிரத்து 385 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், டெண்டர்களின் மதிப்பு உத்தேசமாக 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை சரிசெய்யும் பணிகளுக்கு டெண்டர் வெளியிடப்பட்டு வருகிறது என்றும், அடுத்த ஓரிரு நாளிலும், அதிக டெண்டர்கள் வெளியிடப்படும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















