அமெரிக்கா தனது நன்மைகளுக்காக பாகிஸ்தான் டாய்லெட் பேப்பர் போன்று பயன்படுத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா மீது பாகிஸ்தானின் திடீர் கோபத்திற்கு காரணம் என்ன?
அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது முதல், வாஷிங்டன் உடனான உறவு பாகிஸ்தானுக்கு கசப்பை ஏற்படுத்தி வருகிறது… இந்த சூழலில் அண்மையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், அமெரிக்கா, பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட மோசமாக நடத்தியதாகக் கூறினார். இந்த தகவல் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1999ம் ஆண்டுக்குப் பின்னர், குறிப்பாக 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு வாஷிங்டனுடன் இஸ்லாமாபாத் நல்லுறவை பேண முயன்றதாகக் கூறினார். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் உடனான உறவு, நாட்டிற்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தியதையும் நினைவு கூர்ந்தார்.. அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாட்டை அதன் நன்மைக்காக சுரண்டுவதாக குற்றம்சாட்டிய கவாஜா ஆசிப், அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறிய பின்னர் டாய்லெட் பேப்பரை போன்று பாகிஸ்தானை தூக்கி எறிந்துவிட்டதாக கடுமையாக சாடினார்… பாகிஸ்தான் பெரும்பாலும், அதன் பயங்கரவாத வரலாற்றை மறுக்கிறது என்றும், இது கடந்த காலத்தில் சர்வாதிகாரிகள் செய்த தவறு என்பதையும் ஒப்புக்கொண்டார்…
2001-ம் ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் போரில், பாகிஸ்தான் இணைந்ததாகவும், அந்த செயல்பாடு தாலிபான்களுக்கு எதிராக திரும்பியதாகவும் கவாஜா ஆசிப் குறிப்பிட்டார்.. ஆப்கானிஸ்தான் போருக்கு பின் பல ஆண்டுகளுக்கு பிறகு பிராந்தியத்லிருந்து அமெரிக்கா வெளியேறியபோதும், பாகிஸ்தான் நீண்டகால வன்முறை, தீவிரவாதம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டு போர்களில் பாகிஸ்தான் ஈடுபட்டது மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ள கவாஜா ஆசிப், இன்று பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதம் கடந்தகால தவறுகளுக்கு பதிலடி என்றும் ஒப்புக்கொண்டார்.
ஆப்கானிஸ்தான் உடனான மோதலில் பாகிஸ்தானின் ஈடுபாடு என்பது மதக் கடமையால் உந்தப்பட்டது என்றும் அவர் நியாயப்படுத்த தவறவில்லை.. ஜிகாத் என்ற கொடியின் கீழ் பாகிஸ்தானியர்கள் போராட அனுப்பப்பட்டதை பாதுகாப்பு அமைச்சர் ஒப்புக் கொண்டார். ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகிய இரண்டு முன்னாள் ராணுவ சர்வாதிகாரிகள் ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் இணைந்ததாகவும், அவர்கள் இஸ்லாத்திற்காக இணையவில்லை மாறாக, அமெரிக்காவை திருப்திபடுத்தவே இணைந்ததாகவும் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். பயங்கரவாதம் என்பது கடந்த காலத்தில் சர்வாதிகாரிகள் செய்த தவறுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி என்று அமைச்சர் கூறினார்.
இஸ்லாமாபாத் சந்தித்த இழப்புகளை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது என்று கூறிய ஆசிஃப், பாகிஸ்தானின் தவறுகளை ‘மீளமுடியாதவை’ என்று குறிப்பிட்டார்… இந்தப் போர்களை நியாயப்படுத்த பாகிஸ்தானின் கல்வி முறை மறுவடிவமைப்பு செய்யப்பட்டதாகவும், இன்றும் உட்பொதிக்கப்பட்ட சித்தாந்த மாற்றங்களுடன் இருப்பதாகவும் ஆசிஃப் குறைகூறினார்… பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள், இந்தியாவுக்கு எதிரான இஸ்லாமாபாத்தின் செயல்பாட்டையும் பிரதிபலிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது…
















