அதிமுக அறிவிப்பால் திமுக கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேர்தல் முடிந்தபின் திமுகவினர் மக்களை மறந்து விடுவதாக விமர்சித்தார்.
மகளிருக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதாக அதிமுக அறிவித்ததால் கூடுதலாக 2 ஆயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் 2021ஆம் ஆண்டு வழங்க வேண்டிய மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு 2026-ல் வழங்குவதாகவும் அவர் விமர்சித்தார்.
இதேபோல் கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுமென போலீசார் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லிலும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், தோல்வி பயத்தால் திமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளதாக விமர்சித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு உண்டா, இல்லையா என்று பட்டிமன்றம் நடப்பதாக விமர்சித்தார். மேலும் அதிமுக கூட்டணி வளர்பிறை என்றும், திமுக கூட்டணி தேய்பிறை எனவும் அவர் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, வாலாஜாபேட்டை, அறந்தாங்கி, நெல்லை மானூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், 125 நாள் வேலைத் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக கூறி கண்டன முழக்கமிட்டனர்.
















