தேசப்பற்று மிக்க மற்றும் தூய்மையான இயக்கமாக திகழும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை யாராலும் குறை சொல்ல முடியாதென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது தேர்தல் வாக்குறுதிகளை தற்போது வரை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தலுக்காக திட்டங்கள் தொடங்கப்படுவதில்லை எனக்கூறும் திமுக அரசு, ஆட்சிக்கு வந்து 28 மாதங்களாக ஆயிரம் ரூபாயை கொடுக்காமல், நாடாளுமன்றத் தேர்தலின்போது திட்டத்தை தொடங்கியதாக விமர்சித்தார்.
அதேபோல் தற்போது சட்டமன்ற தேர்தல் வரும் சூழலில் கோடை கால சிறப்பு நிதி அறிவிப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இந்திய விடுதலைக்காக போராடிய ஆர்எஸ்எஸ் இயக்கம் தூய்மையானது எனவும், தேசப்பற்று மிக்கது என்றும் அவர் கூறினார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை யாராலும் குறைகூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், மாநில சுயாட்சி குறித்து பேசும் திமுகவின் கடந்த காலம் அனைவருக்கும் தெரியும் என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
















