கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதியில் பணியாட்களை கட்டி வைத்துவிட்டு, விடுதியின் உரிமையாளரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சூர்ய நாராயணன், கொடைக்கானலில் தங்கும் விடுதி ஒன்றை வைத்துள்ளார். இந்த விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்த ஐந்து இளைஞர்கள், கடந்த இரண்டு நாட்களாக உரிமையாளர் சூர்ய நாராயணனை நோட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு பணியாட்கள் வேலை முடிந்து சென்ற நிலையில், விடுதியில் சூர்ய நாராயணனும், இரண்டு பணியாட்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
அதனை தெரிந்துகொண்ட அந்த இளைஞர்கள், பணியாட்களை தூணில் கயிற்றால் கட்டிவைத்துவிட்டு, சூர்ய நாராயணனை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சூர்ய நாராயணனின் உடலை மீட்டு, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சூர்ய நாராயணன், நடிகர் சூர்யாவின் மாயாவி படத்தில் நடித்த துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை என்பது தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 2018-ல் தனது மகளின் காதல் விவகாரத்தில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாகவும், அதற்கு பழிவாங்குவதற்காகவே தற்போது சூர்ய நாராயணன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















