ஈரோட்டில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமல், தேர்தலுக்காக அவசர கோலத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஈரோடு திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் அபிராமி அம்பிகை உடனமர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கான கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆசிய அளவில் 247 அடி உயரமுள்ள முருகன் சிலை அமைப்பதற்கான கால்கோள் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, முத்துசாமி ஆகியோர் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழா முடிந்ததும் தீர்த்தங்கள் ட்ரோன் மற்றும் ஸ்பிரேயர் மூலம் தெளிக்கப்பட்ட நிலையில், எல்இடி திரையில் தீர்த்தம் பட்டு தீப்பிடிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் எல்இடி திரையை தார்ப்பாய் கொண்டு மறைத்தனர்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், புனரமைப்பு பணிகள் முடிவுறாத நிலையில் அவசர கோலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கும்பாபிஷேக விழாவுக்கு அறநிலையத்துறை மற்றும் செய்தி தொடர்புத்துறை உரிய ஏற்பாடுகள் செய்யாதது குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளிக்காமல் கோபத்துடன் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
















