தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் 8 பேருக்கு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் தமிழக அரசுகளுக்கு, டெல்லி போலீஸ் அண்மையில் அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில் வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்து, போலி ஆவணங்களை பெற்று, வேலைகளில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களை கண்டறியும்படியும் தெரிவித்திருந்தது.
இதன்படி, திருப்பூர், கோவையில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வரும் வங்கதேசத்தினரை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அதில், உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 103 பேரை, போலீசார் கைது செய்தனர்.
அவர்களில், மிஜனுார் ரகுமான், முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஜாகீத் மற்றும் முகமது உஜால் ஆகிய ஆறு பேரும், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பழி வாங்கும் நோக்கில், டெல்லி, உத்தரப்பிரதேசம் உட்பட முக்கிய நகரங்களில் உள்ள ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், கைதான நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
















