தமிழகத்தின் ஜவுளித்துறைக்கு திமுக பிராந்திய அரசு பூட்டு” போட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 2,773 ஆக இருந்த ஜவுளி ஆலைகளின் எண்ணிக்கை, 2023-24 ஆம் ஆண்டில் 2,455 ஆகக் குறைந்துள்ளதாகவும், கடந்த இரு ஆண்டுகளில் மேலும் 300 ஆலைகள் மூடப்பட்டிருப்பதாகவும் நமது மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது “தொட்டால் ஷாக்கடிக்கும் மின்கட்டணம்” என்றெல்லாம் சினிமா வசனம் பேசிய ஸ்டாலின், முதல்வராகப் பதவியேற்றத்தில் இருந்து ஆண்டுக்கொருமுறை மின்கட்டணத்தை “ஜெட்” வேகத்தில் உயர்த்தித் தமிழகத்தின் பாரம்பரிய ஜவுளித்துறையை முற்றிலுமாக முடக்கிவிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் மீது திமுக அரசுக்கு அப்படியென்ன காழ்ப்புணர்வு? இப்படி உள்ளூர் உற்பத்திக்கு “மூடு விழா” நடத்திவிட்டு, “முதலீடு ஈர்க்கிறேன்”என்ற போர்வையில் மக்கள் வரிப்பணத்தில் வருடாவருடம் வெளிநாடுகளுக்கு முதல்வர் பயணம் சென்றது அப்பட்டமான ஏமாற்று நாடகம் என்பதற்கான மற்றுமொரு உதாரணம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் உழைப்பை சுரண்டுவது மட்டுமன்றி, அவர்களின் வாழ்வாதாரத்தையே பறிக்கும் இப்படியொரு ஊழல் அரசை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே, தமிழகத்தின் தலை தப்பிக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















