தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நாமக்கல், நீலகிரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தீடீரென பெய்த மழையால் மக்கள் நிம்மதியடைந்தனர்.
நாமக்கல் அடுத்த புதன் சந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு மணி நேரமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் ஏற்பட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர்
இதேபோல் , நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் ஒருமணி நேரமாக மழை பெய்தது. இதனால், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ மாணவிகள் சற்று சிரமமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் வழக்கம் போல வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால், சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. எனினும் திடீர் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
















