ஆட்சிக்கு வந்து ஓராண்டில் அமெரிக்கா முன்னேறியுள்ளதாக ட்ரம்ப் கூறிய கருத்துக்கு, வர்ஜீனியாவின் முதல் பெண் ஆளுநரான அபிகேல் ஸ்பான்பெர்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பரஸ்பர வரி விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம் உலக நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த வரியை ரத்து செய்து உத்தரவிட்டது.
தீர்ப்பு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மற்றொரு சட்டவிதிகளின்படி அனைத்து நாடுகள் மீதும் 10 சதவீத வரியை ட்ரம்ப் விதித்தார்.
உச்சநீதிமன்றத்தின் அபத்தமான தீர்ப்பை வைத்து எந்தவொரு நாடும் விளையாட நினைத்தால் எல்லா நாடுகள் மீதும் 15 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.
இந்நிலையில்,ஏற்கெனவே விதிக்கப்பட்ட வரிகளை வசூலிப்பதை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தியுள்ள அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை, அதற்குப் பதிலாக புதிய 10 சதவீத வரிகளை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், தாங்கள் செலுத்திய வரிப்பணத்தை அரசு முழுமையாகத் திரும்பத் தர வேண்டுமென ஃபெட்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தின் ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துரதிர்ஷ்டவசமான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதிபரின் உரை நிகழ்வைப் புறக்கணித்த வர்ஜீனியாவின் முதல் பெண் ஆளுநரான 46 வயதான அபிகேல் ஸ்பான்பெர்கர், அதிபர் ட்ரம்ப் தனது உரையில் நேர்மையாக இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க மக்களின் வாழ்வை எளிமையாக்க அதிபர் ட்ரம்ப் பாடுபடுகிறாரா ? உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பாடுபடுகிறாரா ? உண்மையில் அமெரிக்கர்களுக்காக அதிபர் பாடுபடுகிறாரா? என்ற மூன்று கேள்விகளை அமெரிக்க வாக்காளர்களிடம் முன்வைத்த அபிகேல் ஸ்பான்பெர்கர், மூன்று கேள்விகளுக்கும் இல்லை என்ற ஒற்றை பதிலை தானே தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் பொய் சொல்வதாகவும், அமெரிக்கர்களைப் பலிகடா ஆக்குவதாகவும், நாட்டின் முக்கியமான சவால்களுக்கு எந்த உண்மையான தீர்வுகளையும் வழங்காமல் இருப்பதாகவும் கூறியுள்ள அபிகேல் ஸ்பான்பெர்கர், ட்ரம்ப் ஒரு மோசமான அமெரிக்காவை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் வழக்கு அதிகாரியான ஸ்பான்பெர்கரின் கருத்து, அரசியல் காற்று தங்களுக்கு சாதகமாக மாறுவதாக ஜனநாயகக் கட்சியினர் நம்புகின்றனர்.
காரணம் வர்ஜீனியாவில் ஸ்பான்பெர்கரின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் டெக்சாஸில் நடந்த சிறப்புத் தேர்தல் உட்பட, பிற உயர்மட்ட தேர்தல்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது இடைக்கால தேர்தலில் அதிபர் ட்ரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















