இரண்டு நாள் பயணமாக இன்று இரவு தமிழகம் வரும் பிரதமர் மோடி, நாளை பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், திருப்பரங்குன்றம் கோயிலிலும் தரிசனம் செய்ய உள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி இன்று இரவு மக்கள் மாளிகையில் தங்குகிறார்.
இதனையடுத்து, நாளை காலை 10:20 மணிக்கு சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு செல்கிறார்.
பின்னர் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நண்பகல் 12.55மணிக்கு புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை விமான நிலையம் செல்கிறார்.
அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு மதுரை செல்லும் பிரதமர் மோடி, அங்கு மத்திய அரசின் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
பின்னர், அங்கிருந்து மாலை 4.20 மணிக்கு காரில் புறப்பட்டு, மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
ஒரு மணி நேரம் 15 நிமிடம் நடைபெறும் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு மாலை 6:10 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரையிலிருந்து பிரதமர்மோடி டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
















