சென்னை ராயப்பேட்டை பகுதியில் பணியில் இருந்த காவலருக்கு திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்ததோடு, அவரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் காவலருக்கும் திமுக மாவட்ட துணைச் செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அருண் சிங் என்பவர், அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, திருட்டு வழக்கில் தொடர்புடைய ‘அப்பு’ என்ற நபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்புவை காவலர்கள் அருகிலுள்ள புறக்காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த திமுக சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ந. துரை, திருட்டு வழக்கில் தொடர்புடைய அப்புவை புறக்காவல் நிலையத்திலிருந்து வெளியே இழுத்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தடுக்க முயன்ற காவலர் அருண் சிங், மாவட்ட துணைச் செயலாளர் தள்ளிவிட்டதாகவும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அங்கு திரண்ட 40-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அப்புவை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளியை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த காவலர்களை திமுக நிர்வாகிகள் தாக்கியதாக கூறப்படும் இந்த சம்பவம், ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















